Ticker

6/recent/ticker-posts

புதிய அரசாங்கத்தின் கீழ் நாமலுக்கெதிராக முதல் வழக்கு.

 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரச வாகனம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான வாகனமொன்று, நாமல் ராஜபக்சவினால் அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் நலன்புரி பிரிவுக்குச் சொந்தமான வாகனமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனம் பழுதுபார்ப்பு பணிக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக குறித்த விசாரணையில் மேலும் தெரிய வந்துள்ளது. அத்தோடு, குறித்த வாகனத்திற்கு சாரதியாக செயற்பட்டவரே இந்த வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் கராஜ் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குறித்த வாகனம், மறு நாள் ஹொரவபொத்தானை பகுதியில் மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி அனுராதபுரத்தில் இடம் பெற்ற நாமலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லங்கா எலெக்ட்ரிசிட்டி (Lanka Electricity)  தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மொண்டிரோ ரக ஜீப் ஒன்றே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments