Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருக்கமான ஊடக அறிக்கை!


கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகுந்த தொங்கு பாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அக்குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்கு பாலத்தினூடாகக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு:

வணக்கம்
அன்புள்ள பிரஜைகளே,

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அத்தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அத்தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்தல் வேண்டும். 

இற்றைக்கு 02 வருடங்களுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங் கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் குறித்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய குறித்த பொறுப்பை நான் சிறப்பாக நிறைவேற்றினேன். 02 வருட குறுகிய காலப் பகுதியினுள் என்னால் இந்நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமை நிறைந்த பொறுப்பு இதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு 70 வீதமாகக் காணப்பட்ட பண வீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது. 

20 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை 5.7 பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது. 

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் 380 ஆக காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை 300 ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரையில் அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கையினை மேற்கொண்டேன். அது பற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் நன்கு அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கியுள்ளேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என்று நான் எதிர்பார்க்கின்றேன். 

மிகவும் சவால் மிகுந்த தொங்கு பாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளேன். தொங்கு பாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த பாசம் மிகுந்த குழந்தையினை அநுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

தௌரவ ஜனாதிபதி அனஔநுர குமார திஸாநாயக்க அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் தற்போது மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இக்குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்கு பாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்கா விட்டாலும் இந்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்த விதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன் என்பதை தெரிவிக்கிறேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தில் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இதருணத்தில் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024-09-22

Post a Comment

0 Comments