Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தலுக்கு அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கின்றோம். பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் திகதியை இயன்றளவு விரைவாக அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு  2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய குறித்த தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கின்றது.

அரசியலமைப்புக்கமைய 2024.07.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானிக்கமைய 2024.09.21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அது தொடர்பாக 2024.08.28 ஆம் திகதி ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் மாவட்ட பிரதி உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள், அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 30 - 35 வரையான நாட்கள் அவகாசம் தேவைப்படும் என அவதானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.09.24 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்புப் திகதியை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தார்.

நாட்டின் சட்டவாக்கத்துறைக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நோக்கத்திற்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேரிட்டுள்ளது. அதே போல ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு காலப்பகுதியினுள் தீர்மானிக்கப்பட்டவாறு பாராளுமன்றத் தேர்தலுக்கிடைப்பட்ட காலத்தினுள், அதாவது 2024.10.26 ஆம் திகதி காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடாத்துவதற்கும் நேரிட்டுள்ளது.

நாட்டு மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை பாதுகாப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அதன் செயற்பொறுப்பை சிறந்த முறையில் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதுடன், 2024. ஆகஸ்ட் 22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுடன் இசைந்து சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடாத்தும் செயற் பொறுப்பையும் கவனத்திற் கொண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் இயன்றளவு விரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு திகதி அறிவிக்கப்படுமன்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போட்டமைக்கெதிராக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சில சிவில் அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் கடந்த 2024 ஆகஸ்ட் 22 ஆம் திகதி ' உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. ஜனாதிபதி உட்பட தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளனர்' என்று தீர்ப்பளித்ததுடன், அரச தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..



Post a Comment

0 Comments