Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யார் யார் போட்டியிருகிறார்கள்?

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதா? என்ற நீண்ட இழுபறி நிலைக்கு மத்தியில் இன்று (09) கண்டியிலுள்ள தனியார் விடுதியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று பல முக்கியஸ்தர்கள் ஒன்று கூடியுள்ளனர்.


கடந்த பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியோடு கூட்டிணைந்து 06 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் 06 வேட்பாளர்களை நிறுத்துவதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளது. அம்பாறை தொகுதியில் சிங்கள பெரும்பான்மை வாக்குகள் முன்பை விடவும் அதிகரித்துள்ளதால், முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை விட விருப்பு வாக்கின் அடிப்படையில் சிங்கள வேட்பாளர்கள் அதிகமாக வாக்குகளை பெறுவதற்கு வாய்ப்புள்ளதே இத்தாமதத்திற்கு பிரதான காரணமாகும்.

இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 03 வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலமாக தமது ஆசனத்தை தக்க வைக்க முடியும் என்று நம்புகின்றனர். இருந்தாலும், 03 வேட்பாளர்களை நிறுத்துவதால் கட்சியின் முக்கிய பிரதேசங்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாதிக்கப்படுவதால் கட்சியின் வாக்குகள் மாற்று கட்சிகளுக்குச் சென்று விடும் என்பதுடன் எதிர்காலத்தில் கட்சியை விட்டு ஆதரவாளர்கள் வெளியேறும் ஆபத்தும் உள்ளதென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சிக்கு எதிராக செயற்பட்ட நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க கூடாது என்று பலமான எதிர்ப்பலைகள் கட்சிக்குள்ளும், பொது மக்கள் மத்தியிலும் கிழம்பியுள்ளதால் கட்சி தீர்மானம் எடுப்பதில் இம்முறை பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது. இப்படியான இறுக்கமான நேரத்தில் கட்சியின் தலைமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை தற்போது கண்டிக்கு அழைத்து 
கண்டியிலுள்ள தனியார் விடுதியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதிக் கூட்டம் தற்போது நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர்,  தவம், சட்டத்தரணி கபூர், உதுமாலெப்பை, அன்வர் நெளசாத், வாஸித் ஆகியோர் தமக்கான வாய்ப்புக்காக காத்து நிற்கின்றனர். அதே நேரத்தில், இன்று (09)  வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான முழு விபரமும் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments