Ticker

6/recent/ticker-posts

இன்று இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) இலங்கை வரவுள்ளார்.


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) எனும் எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் இருக்குமென்று தெரிவிக்கப்படுகின்றது.



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இவ்விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


 

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை (05) காலை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம் பெறும்.


 

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்படவுள்ளன.


 

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஆரம்பிப்பித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெற்றிக் தொன் தம்புள்ளை களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் போன்றன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


 

அத்தோடு, இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ளவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


 

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments