வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் அதன் பின்னர் அமெரிக்க டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு அதிகரித்துச் செல்லும் என்று தம்மை எச்சரித்தார்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த காலப் பகுதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கி அனுமதியை வழங்க நடவடிக்கையை எடுத்திருந்தோம்.
இதன் போது, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி மீண்டும் கடுமையாக உயருமென்றும் 400 ரூபாய் என்ற மட்டத்தை டொலரின் பெறுமதி தொடும் என்றும் எம்மை எச்சரித்தனர்.
டொலரின் பெறுமதியை வைத்து பலரும் பிரசாரங்களை மேற்கொண்டனர். இன்று என்ன நடந்துள்ளது? வாகன இறக்குமதிக்கு நாங்கள் அனுமதி வழங்கியிருக்கியுள்ளோம்.
அதே போன்று டொலரின் பெறுமதியையும் மாற்றமில்லாமல் பேணி வருகின்றோம். நீண்ட காலத்திற்கு 300 ரூபாய் என்ற மட்டத்தில் நாங்கள் டொலரின் பெறுமதியை நிலை நிறுத்தியுள்ளோம்.
ஒரு காலத்தில், இரவு வேளையில் உறங்கச் செல்லும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி ஒன்றாகவும், காலை விழித்ததும் டொலரின் பெறுமதி வேறொன்றாகவும் ஸ்திரமற்ற நிலையிலேயே காணப்பட்டது. அப்படிப்பட்ட நிலையை எமது அரசாங்கம் மாற்றியமைத்து டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments