கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரையில், இடைக்காலத் தீர்வாக 99 வருட குத்தகையாகக் கச்சத்தீவைப் பெறல் வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமுமின்றி நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இலங்கை செல்லும் ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக கடற்றொழிலாளர்கள் இதுவரை 800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு விட்டன. குஜராத் போன்ற ஏனைய மாநில கடற்றொழிலாளர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மாத்திரம் கை விடுவது ஏன்?
ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதனை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும், பாதுகாப்பும், அமைதியும், நிம்மதியும் நிரந்தரமானதாக இருப்பதற்கு பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வாகும்.
நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பேயாகும். இந்நிலையை நோக்கி நகர, சர்வதேச சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
ஒன்றியப் பிரதமர், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ எனும் பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.
நமது கடற்றொழிலாளர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஒன்றியப் பிரதமரின் குறித்த இலங்கைப் பயணம் தமிழக கடற்றொழிலாளர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments